உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை தரிசனத்திற்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக உடனே முயன்றது கேரள மாநில அரசு. ஆனால், அப்போதே, இவ்வளவு அவசரம் ஏன் என்று சபரிமலை பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், சபரிமலை பக்தர்கள், பாஜக., இந்து இயக்கங்கள் என பல தரப்பும் சபரிம்லைக்காக போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதன் காரணத்தால் பல்வேறு பிரச்னைகள் கேரளத்தில் எழுந்துள்ளன.
எதிர்ப்பாளர்கள் உடனடியாக இந்தத் தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என்று கால அவகாசம் கோரி கேரள அரசிடம் முறையிட்டனர். ஆனால் கேரள அரசு அதை கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் இரு தினங்கள் மட்டுமே கோயில் நடை திறக்கப் பட்ட போதும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவது என்ற சாக்குப் போக்கைச் சொல்லி, தங்களின் மறைமுக செயல்திட்டத்தை கேரள கம்யூனிஸ அரசு செயல்படுத்த முனைந்தது.
இந்நிலையில் பக்தர்களின் எதிர்ப்பால் அம்முயற்சி தோற்கடிக்கப் பட்டது. இதையடுத்து மண்டல பூஜைக்காக நடை திறக்கும் சூழலில், கேரள அரசு கூட்டிய அமைதிக் கூட்டத்திலும் பந்தளம் அரண்மனை தரப்பு, மகர ஜோதி முடியும் வரையில், இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதில் கால அவகாசம் வேண்டும் என்று கோரியது. ஆனால் அது ஏற்றுக் கொள்ளப் படாத நிலையில், பிரச்னை மீண்டும் வெடித்தது.
இந்நிலையில், கேரள அரசின் சார்பில் இயங்கும் தேவசம்போர்டு பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில், கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.