புது தில்லி : முத்தலாக் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப் பட்டது.
தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே முத்தலாக் அவசர சட்டம் தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், முத்தலாக் அவசர சட்டம் தொடர்பான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சிகள் மசோதாவைத் தாக்கல் செய்ய விடாமல் அவையை முடக்கின. ஜிஎஸ்டி, ஆர்பிஐ விவகாரம், மேக்கேதாட்டு அணை விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் குறித்து ராகுல் கூறிய கருத்துகள் என பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக., என அனைத்து கட்சிகளும் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதே போன்று மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. இதனால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட மாநிலங்களவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.