சபரிமலை சன்னிதானத்தில்
மொபைலுக்கு கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருக்கிறது தேவஸ்வம் போர்டு.
சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசி மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று சபரிமலை தேவஸ்வம் போர்டு முடிவு எடுத்திருக்கிறது. அண்மையில் சபரிமலையில் மூலவர் படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது தேவஸ்வம் போர்டு!
பொதுவாக கேரள கோயில்களில் புகைப்பட, வீடியோ கேமராக்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சபரிமலையில் அண்மைக்கால சர்ச்சைகளால் அதிக அளவில் ஊடகங்களில் கவனம் பதிந்ததால், இந்த முறை ஊடகங்கள் சபரிமலையைச் சுற்றியே அதிக அளவில் செய்திகளை ஒளிபரப்புகின்றன. மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக சபரிமலை பிரச்னை திகழ்வது ஒரு காரணம்.
இந்த முறை தென்மேற்குப் பருவமழை தொடங்கிய சற்று நாட்களில் ஏற்பட்ட வெள்ளம், இயற்கைப் பேரிடர்கள், அவற்றுக்கான சீரமைப்புக்கு குவியும் நிதி, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமை என எல்லாவற்றையும் மறந்து, சபரிமலை விஷயத்தை மட்டுமே பெரிதும் கவனத்திக் கொண்டிருக்கிறது மாநில கம்யூனிஸ அரசு.
சபரிமலைக்கு ஆதரவாக ‘மகளிர் சுவர்’ என்ற மனிதச் சங்கிலிப் போராட்டக் களத்தை கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற பாரம்பரியப் பழக்கங்களுக்கான, சபரிமலை ஐதீகம் காக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து பெண்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவற்றுக்கு மாற்றாக ஒரு பெண்கள் போராட்டத்தை அரசே ஏற்பாடு செய்துள்ளது.
சபரிமலையில் நிகழும் அத்துமீறல்களைக் கண்காணிக்கவும், மக்களிடையே வெளிப்படுத்தவும் ஊடகங்கள் பெரிதும் முன் நிற்கின்றன. குறிப்பாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘ஜனம் டிவி’ மற்றும் பக்தர்களின் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம், சபரிமலையில் அரசு மேற்கொண்ட அத்துமீறல்கள், அடாவடிகள் அதிகம் வெளியே தெரிந்ததால், இத்தகைய முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் பக்தர்கள்.