புதுதில்லி : குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு எதிராக, பாஜக., தலைவர்கள் செயல்படுவதாக, போலியான செய்திகளை பரப்பி, அவப்பெயரை உண்டாக்கும் முயற்சியில், எதிர்க் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் என பாஜக., குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக., தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர், அமித் மால்வியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி அவதூறாகப் பேசியதாக, அணமையில் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தான், அந்தச் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அந்தப் பதிவே போலியானது என்று அதை அவர் நீக்கிவிட்டார்.
பாஜக.,வுக்கும், அதன் தலைவர்களுக்கும் எதிராக சில குறிப்பிட்ட சமூகத்தினரை துாண்டி விடும் நோக்கத்தில், இது போன்ற பொய்யான வதந்திகளை, எதிர்க் கட்சியினர் பரப்பி வருகின்றனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தினால், இப்படிப்பட்ட தரங்கெட்ட செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்… என்றார் அவர்.