
காந்தி நினைவு நாளான நேற்று, அவருடைய உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்டு, அதை ஓர் அரசியல் செயல்பாடாகக் கொண்டாடினார் இந்து மகா சபா தலைவர் பூஜா சாகுன் பாண்டே. அவருடைய செயலுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில், பூஜா சாகுன் பாண்டே உட்பட 13 பேர் மீது உத்தரப் பிரதேச அலிகார்க் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவர் மட்டும் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை கணிதம் மற்றும் கணினித் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் பூஜா பாண்டே! அவரைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி… அகில பாரதிய ஹிந்து மகா சபா இந்துக்கள் நீதிமன்றத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது. கடந்த சுதந்திர தினத்தன்று, நீதிமன்றத் தொடக்க விழாவை நடத்தி, அதன் நீதிபதியாக பூஜா பாண்டேவை நியமித்திருக்கிறார்கள்.
இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பூஜா சாகுன் பாண்டே, நீதிபதியாகப் பதவியேற்றுப் பேசுகையில், `இந்துப் பெண்களுக்கு நடக்கும் வன்முறை, இந்துத் திருமணத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் இந்து மக்கள் தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைத்து, எங்கள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். தண்டனைக்கான சிறைச்சாலைகளை உருவாக்கும் பணியில் இருக்கிறோம். அதிகபட்சமாக மரண தண்டனை வரை எங்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
நீதிமன்ற உருவாக்கப் பணிகளில் இருந்த பூஜா பாண்டே, காந்தியின் உருவப் படத்தை துப்பாகியால் சுட்ட வழக்கில் நேற்றிலிருந்து போலீசாரால் தேடப்பட்டு வருவது, இந்து மகா சபை உறுப்பினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

