ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் செயலர் சுரேஷ் பையாஜி ஜோஷி ஆகியோர் இன்று காலை நாக்பூரில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். நாக்பூரில் உள்ள பாவ்ஜி தப்தாரி பள்ளியில் அமைக்கப் பட்டுள்ள 216 வது எண் வாக்குச்சாவடியில் இன்று காலை தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களிப்பது நமது கடமை. ஒவ்வொருவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
மக்களவைத் தேர்தல் 2019ல், நாடு முழுவதும் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது.
7 கட்டமாக நடக்கும் இந்தத் தேர்தலில் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இன்றைய களத்தில்1,279 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே.,சிங், கிரன் ரிஜுஜூ ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.
ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்றைய தேர்தலில் 14.20 கோடி பேர் வாக்களிக்கின்றனர்.
தேர்தலில் அனைவரும் தங்களின் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
2019 Lok Sabha elections commence today.
I call upon all those whose constituencies are voting in the first phase today to turn out in record numbers and exercise their franchise.
I specially urge young and first-time voters to vote in large numbers.
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 11, 2019
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் இன்று மக்களவைத் தேர்தல் நடக்கும் பகுதிகளில் அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக முதல் ஓட்டு செலுத்தவிருக்கும் இளைய தலைமுறையினர் பெருவாரியான வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
பாஜக தலைவர் அமித்ஷா கூறியபோது, ஜனநாயக கடமையை தவறாமல் மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்றார்.




