ராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி!

Published:

lalitmodi - 2026

புது தில்லி: திருடர்களின் பெயர்கள் எல்லாம் மோடிகளாகவே உள்ளன என, மோடிகள் எல்லாம் திருடர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி, ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளார்.

தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி அமைப்பின் தலைவராக இருந்த லலித் மோடி மோசடி வழக்கில் சிக்கியதையும், நீரவ் மோடி வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதையும் குறிப்பிட்டு திருடர்களின் பெயர்கள் எல்லாம் மோடி என்று இருக்கிறது எனக் கூறினார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ‘ராகுல் பிற்படுத்தப்பட்ட மோடி சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார் என்று கூறினார்.

பீஹார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடியும் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த லலித் மோடி, “மோடி சமூகத்தை சேர்ந்த அனைவரையும் அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியுள்ளார். இதற்காக ராகுல் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இந்த நாட்டை 50 ஆண்டுகளாக கொள்ளை அடித்த ராகுலின் ‘காந்தி’ குடும்பத்தினர், மோடி சமூகத்தினரை இழிவாக பேசுவது கண்டனத்துக்குரியது என்றார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

லலித் மோடி ஐ.பி.எல்., தலைவராக இருந்தபோது ரூ. 470 கோடி மோசடி செய்ததாகஅமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து லலித் மோடி பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். அவரை நாடு கடத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது!

லலித் மோடி வழக்கு தொடர்வதாகக் கூறியிருந்த போதிலும், பிரிட்டனில் அவரால் வழக்கு தொடுக்க முடியாது என்று பிரிட்டன் சட்ட வல்லுநர்கள் அவருக்குக் கூறியுள்ளனர். இந்திய நீதிமன்றங்களில் மட்டுமே, ராகுலுக்கு எதிராக மோடி வழக்கு தொடுக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

Related articles

Recent articles

spot_img