மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அமைப்பு அறிவித்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது பெருமிதம் தெரிவித்தார்
ஐநா., எடுத்த இந்த முடிவு மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் குரல்வளையை வெகுநாள் நெருக்கி வைத்திருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முடிவு ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டிருப்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது என்றார். இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்டு இருக்கிறது என்றாலும் இது மிக சிறப்பான முடிவு என்று கூறினார் பிரதமர் மோடி
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை வேரோடு சாய்க்க இந்தியா எடுத்துள்ள முயற்சிக்கு சர்வதேச நாடுகள் அளிக்கும் மிகப் பெரும் அங்கீகாரம் என்றும் இது இந்தியாவின் மிகப் பெரும் வெற்றி என்றும் கூறினார் பிரதமர் மோடி
130 கோடி இந்தியர்களின் குரல் ஐநாவில் தற்போது எதிரொலித்திருக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை வெறும் ஆரம்பம் தான் என்றும் அடுத்து நடக்கப் போவதைக் காண அனைவரும் காத்திருங்கள் என்றும் பேசினார்@dhinasari.