சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவ்வாக இருந்த மோகித் என்பவர், இளைஞர்கள் மூவரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். தில்லியில் கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கொலையில் ஈடுபட்டுள்ள ஒருவரின் அடையாளத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்த போலீஸார் கொலைக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தள செயலியான டிக்டாக், இன்ஸ்டாக்ராம் ஆகியவற்றில் பிரபலமாக இருந்தவர் ஜிம் பயிற்சியாளரான மோகித். இவர் தென்மேற்கு டில்லியின் நகர் பகுதியில் மூன்று பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் மீது 13 தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.
ஹரியானாவின் பக்தூர்கர் பகுதியைச் சேர்ந்த மோஹித் என்பவர் நஜாஃப்கர் நகரில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்தார். இவருக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம்! இந்நிலையில் டிக்-டாக் செயலி மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகியவை உதவிகரமாக இருந்துள்ளன.
டிக்டாக் செயலி மற்றும் இன்ஸ்டாக்ராமில் இவர் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டார். இதன் மூலம் சோசியல் மீடியா செலிபிரிடி என்ற புகழைப் பெற்றார்.
தனது பக்கங்களில், சமூக நல்லிணக்கம் நன்றியை எதிர்பார்க்காமல் உதவி செய்வது பாலிவுட் படங்களில் உள்ள சின்ன சின்ன சீன்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு வீடியோக்களை பதிவிட்டார்.
அவரது வீடியோக்கள் வைரலாகப் பரவின. டிக்டாக்கில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தொட்டது. இது அங்கிருந்த உள்ளூர் இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது
இதையடுத்து மோகத்துக்கும் உள்ளூர் இளைஞர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோஹித் அவர்களை கிண்டல் செய்யும் விதமாக வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இது உள்ளூர் இளைஞர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நண்பரின் கடைக்கு வந்த மோகித் அங்கே பேசிக் கொண்டிருந்த போது, மோட்டார் பைக்கில் வந்த 3 பேரால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மார்பு வயிற்றுப்பகுதிகளில் 13 குண்டுகள் பாய்ந்துள்ளன.
இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மோகித் சில நொடிகளிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து துவாரகா டிசிபி கூறியபோது மோகத்தின் மரணத்துக்கு கும்பல் வன்முறை காரணம் என்பதை மறுப்பதற்கில்லை! மோகித் மீதான தனிப்பட்ட விரோதம் அவரது கொலைக்கு காரணமாகத் தெரிகிறது. கொலையாளிகளில் ஒருவர் ஹெல்மெட்டை கழற்றி விட்டு மீண்டும் அணிந்துள்ளார். அது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே விரைவில் குற்றவாளிகள் அனைவரும் பிடிபடுவர் என்று கூறினார்!
எழுதி பிரபலமாகி அதன்மூலம் பொறாமையை சம்பாதிப்பவர்கள் சிலர்! டிக்டாக் வீடியோ பதிந்து பிறர் பொறாமையை சம்பாதித்து அது கொலையில் முடிந்துள்ளது சமூகவலைத்தள வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
மோகித் மோரின் பேஸ்புக் பக்கத்தில் அவரது நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில் அவர் கொலையுண்ட படமும் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் மட்டுமல்லாது அவரது வீடியோக்களுக்கு விசிறிகளாக இருந்தவர்களும் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.