மம்தா செய்தது முட்டாள்தனம் என்று கூறியுள்ள சிவசேனாவின் பத்திரிகை சாம்னா, நாட்டை வலிமைப் படுத்துவதற்காக 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பது ஈஸ்வர்ய யோஜனா (இறைவனின் திட்டம்) கூறியுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகார பூர்வ இதழான சாம்னாவில், அவ்வப்போது பிரதமர் மோதியை புகழ்ந்து கட்டுரைகளும் கருத்துகளும் வெளியாகி வருகின்றன. தற்போது அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், பாஜக., கூட்டணியில் உள்ள சிவசேனா மோதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், மம்தாவை ஒரு குட்டு வைத்துள்ளது.
மம்தா பானர்ஜி, மோதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு விடுக்கப் பட்ட அழைப்பை நிராகரித்தது தவறு என்று கூறி சில கருத்துகளையும் அது தெரிவித்துள்ளது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன. அவர்களில் முக்கியமானவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா. பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனுப்பப்பட்ட அழைப்பை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பதவியேற்பு விழாவிற்கு அழைத்ததுதான் மோதி பதவியேற்பு விழா அழைப்பை மம்தா புறக்கணித்ததற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
மோதியின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப் பட்டவர்கள் இந்தியர்கள் தான். வங்கதேசத்தினர் இல்லை. மற்றவர்களைப் போல் பிரதமரின் பதவியேற்பில் பங்கேற்க அவர்களுக்கும் உரிமை உள்ளது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் குறித்து மோடி எதுவும் பேசவில்லை. மனிதகுலத்திற்காக கலாசாரத்தின்படி புதிய ஆட்சியை நடத்த மோடி நினைக்கிறார். அதனால் தான் அவரது பதவியேற்பை உலகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
திரிணமுல் காங்கிரஸும் மம்தா பானர்ஜியும் ஜனநாயக விரோதமாகவே உள்ளனர். ஒடிஸாவில் புயல் தாக்கியது. பிரதமர் மோதி வந்தார். உதவினார். இணைந்து செயல்பட்டனர். இத்தனைக்கும் பாஜக., ஒடிஸாவில் தோல்வியே அடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி விஜயி வீர் என வெற்றி அடைந்தார். பிரதமரை சந்தித்தார். ஆந்திரப் பிரதேசத்துக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டார் பிரதமர். ஆந்திரத்திலும் பாஜக., தோல்வியே அடைந்தது.
மோடியின் 2வது திருவிழா இன்று துவங்குகிறது. மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட மோடி விரும்பவில்லை. அதனால் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அவர் அழைப்பு அனுப்பவில்லை.
மோடியின் தலைமையில் நாடு செயல்பட வேண்டும் என்பது ஈஸ்வர்ய யோஜனா… (இறைவனின் திட்டம்) என்று குறிப்பிட்டுள்ளது சாம்னா.