
கலபுரகி அருகேவீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 பேர் பரிதாமாக உயிரிழப்பு இப்தார் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு நேர்ந்த சோகம்.
கலபுரகி மாவட்டம் காலகி தாலுகா மங்கலகி கிராமத்தை சேர்ந்தவர் ஹைதர்சாப். ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு ஹைதர்சாப்பின் வீட்டில் இப்தார் விருந்து நடந்தது.
இந்த விருந்தில் அவருடைய உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருந்தை முடிந்ததும் அனைவரும் இரவில் வீட்டில் தூங்கினார்கள்.
அப்போது இடி, மின்னல் ஏற்பட்டது. அத்துடன் பலத்த காற்றும் வீசியது. இந்த வேளையில் திடீரென்று வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதனால் வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வீட்டில் படுத்து தூங்கிய குமனூர் கிராமத்தை சேர்ந்த ஆபிதாபி (வயது 60), முகமது முஸ்தாக் என்பவரின் மகள் ஆல்தியா (12), நபிலால் என்பவரின் மகன் சபீக் (10) ஆகியோர் இடிபாடுகளிக்கிடையே சிக்கி இறந்து போனது தெரியவந்தது.
மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு சேடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு காலகி போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்தார் விருந்தில் கலந்து கொண்ட மூவர் உயிரழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


