மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பை கனமழை காரணமாக தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப் படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, மும்பையில் இன்று ( ஜூலை 2-ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் தென் மேற்குப் பருவமழைக் காலம் என்பதால் மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், கோவா உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யும். ஆனால் இந்த முறை பருவமழை தாமதமாகவே தொடங்கியது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மும்பையின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. மும்பையில் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து மும்பை பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.