இது இரட்டைக் குழந்தை கிணறு என்பதுதான் சுவாரசிய செய்தி. இந்தக் கிணற்று நீருக்காக அமெரிக்காவே அடி போடுகிறது என்றால் அதன் மகிமையை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
இந்த ஊர் கிணற்று நீரைக் குடித்தால் இரட்டை குழந்தை பிறக்குமாம்…. இப்படி இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார் இந்த மக்கள். இவ்வாறு அசைக்க முடியாத மக்கள் நம்பிக்கைக்கு, என்ன காரணம்?
இந்தக் கிணற்று நீர் குறித்து ஊடகங்களில் செய்தி வெளி வரவே வெகு தொலைவில் இருந்தெல்லாம் இந்தக் கிணற்று நீருக்காக பெண்கள் விரைந்து ஓடி வருகின்றனர்! வரிசை கட்டி மக்கள் நிற்பதைப் பார்த்தால் நமக்கு மலைப்பாகத்தான் உள்ளது.
ஆனால் இந்தச் செய்தியில் எவ்வளவு தூரத்துக்கு உண்மை உள்ளது என்ற எண்ணமும் நமக்கு ஏற்படுகிறது அல்லவா?
கிழக்கு கோதாவரி மாவட்டம் ரங்கம்பேட்டை மண்டலம் ‘தொட்டி குண்ட’ என்ற கிராமத்தில் உள்ள ஒரு கிணறு, இந்தப் பரபரப்புக்கு காரணம் ஆகி உள்ளது. ஆந்திரம், தெலங்கானா என, இரு தெலுங்கு மாநிலங்களில் இருந்தும் இந்தக் கிணற்று நீரைப் பருக ஓடோடி வருகின்றனர் பலர். இது குறித்த செய்தியின் அடிப்படையில் நிலைமையை ஆராய, சர்வதேச ஊடகம் ஒன்று, அந்த கிராமத்துக்கு சென்றது.
சுமார் 4,500 மக்கள்தொகை கொண்ட குக்கிராமம்தான் தொட்டிகுண்ட! இது ஒரு விவசாய கிராமம். மேட்டுப் பயிர் சாகுபடி அதிகம்.
பொதுவாக இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது, மனிதர்கள் வாழ்வில் அரிதுதான். ஆனால், தொட்டிகுண்ட கிராமத்தில் அதிக அளவில் இரட்டைப் குழந்தைகள் பிறந்துள்ளார்கள். கிராமவாசியான அடபா வெங்கடேஷ், கிராமத்தில் சுமார் 110 பேருக்கு மேல் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று அவரிடம் கேட்டபோது, அதற்கு இந்த ஊரில் உள்ள கிணற்று நீரை அருந்துவதுதான் காரணம் என்று நம்பிக்கையுடன் கூறினார். 6 வயது முதல் 60 வயது முதியவர் வரை இந்த கிராமத்தில் இரட்டையர்கள் உள்ளனர். அதனால் இந்த கிராமத்திற்கு தனிச்சிறப்பு வந்துள்ளது.
வெளியூர்களில் இருந்து வந்து கிணற்று நீரை டின்களில் நிரப்பி எடுத்துச் செல்வது சர்வ சாதாரணமாக உள்ளது. டிவி சேனல்களில் இது குறித்த செய்தி வெளிவரவே கூட்டம் அதிகமாகிவிட்டது.
ஆனால், ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் நிபுணர் டாக்டர் பத்மஜா, இந்தக் கினற்று நீருக்கும் இரட்டைக் குழந்தைக்கும் தொடர்பு இல்லை என்கிறார்.
இது குறித்த சர்ச்சைகள் தற்போது பரவலாக எழுந்திருப்பினும், கிணற்று நீரின் மகிமைதான் இது என்று மக்கள் பலரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்த நம்பிக்கை பலமாகவே, தற்போது அமெரிக்காவுக்கு சோதனைக்காக இந்தக் கிணற்று நீரை அனுப்பும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.


