இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. போக்குவரத்து விதிமுறைகளை எல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது. இதன் விளைவாக இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா இதற்கு ஒரு உதாரணம்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகை, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது மிக கடுமையான அபராதம் என்பதால், வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை இனி முறையாக கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டா நகரின் சுராஜ்பூர் பகுதியில் உள்ள காந்தா சௌக் எனும் இடத்தில், போக்குவரத்து ஹெட் கான்ஸ்டபிள் குன்வர் பால் சிங் என்பவர், கடந்த திங்கள் கிழமை காலை 9.40 மணியளவில் வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது உத்தரபிரதேச மாநிலம் புலண்ட்ஷகர் பகுதியை சேர்ந்த சைலேஷ் குமார் ஷர்மா என்ற இளைஞர் பைக்கில் அவ்வழியாக வந்தார். இவர் நொய்டாவின் பங்கெல் பகுதியில் தங்கியுள்ளார். சைலேஷ் குமார் ஷர்மா தற்போது வேலையில்லாமல் வேலை தேடி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் சைலேஷ் குமார் ஷர்மா ராங் சைடில் (Wrong Side) பயணம் செய்தார். ராங் சைடு பயணம் மிகவும் ஆபத்தானது. இது சாலை விபத்துக்களுக்கு வழி வகுத்து விடும். ஆனால் இதனை உணராத சைலேஷ் குமார் ஷர்மா, ராங் சைடில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் ராங் சைடில் சென்றதன் காரணமாக அங்கு போக்குவரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் குன்வர் பால் சிங் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்ய முயன்றார். அதற்கு முன்னதாக ராங் சைடில் வந்த சைலேஷ் குமார் ஷர்மாவினுடைய பைக்கின் சாவியை காவலர் குன்வர் பால் சிங் எடுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சைலேஷ் குமார் ஷர்மா காவலர் குன்வர் பால் சிங்கை தாக்க தொடங்கினார்.
இதுகுறித்து காவலர் குன்வர் பால் சிங் கூறுகையில், ”எனது சட்டை காலரை பிடித்து சைலேஷ் குமார் ஷர்மா என்னை அறைந்தார். அத்துடன் எனது இடது கையில் இரண்டு விரல்களையும் கடித்து விட்டார். இதனால் நான் வலியில் அலறி துடித்தேன். அத்துடன் உதவிக்கு அருகிலிருக்கும் காவலரையும் அழைத்தேன்” என்றார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இதர வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள், உதவிக்கு ஓடி வந்தனர்.
அவர்கள் காவலர் குன்வர் பால் சிங்கை மீட்டதுடன், சைலேஷ் குமார் ஷர்மாவையும் பிடித்தனர். இது குறித்து காவலர் குன்வர் பால் சிங் மேலும் கூறுகையில், ”டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் போன்ற எந்தவிதமான ஆவணங்களும் சைலேஷ் குமார் ஷர்மாவிடம் இல்லை. எனவே அங்கிருந்து தப்பி செல்வதற்காகவே சைலேஷ் குமார் ஷர்மா என்னை தாக்கினார்” என்றார்
முன்னதாக இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீஸ் ஹெல்ப்லைன் எண்ணுக்கு காவலர் குன்வர் பால் சிங் டயல் செய்தார். இதன் பேரில் சுராஜ்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அதன்பின் சைலேஷ் குமார் ஷர்மாவை அவர்கள் கைது செய்தனர். அத்துடன் சைலேஷ் குமார் ஷர்மாவின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்பின் சைலேஷ் குமார் ஷர்மாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.