கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பரிசளித்த பெங்களூரு நகர பெண் மேயருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாஜக., தலைவர் எடியூரப்பா மீண்டும் முதல்வர் ஆகியிருக்கிறார். இதை அடுத்து மரியாதை நிமித்தமாக பலரும் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பரிசுப் பொருட்களையும் அளித்து வருகின்றனர்.
அவ்வகையில் பெங்களூரு மாநகராட்சி மேயராக பதவி வகிக்கும் கங்காம்பிகே மல்லிகார்ஜுனும் முதல்வர் எடியூரப்பாவை சந்திக்க வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த கங்காம்பிகே மல்லிகார்ஜுன், கனிகள் மற்றும் உலர் கனிகள் கொண்ட சிறிய கூடை ஒன்றையும் மரியாதை நிமித்தமாக பரிசளித்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
ஆனால் இந்தப் புகைப்படமே அவருக்கு வில்லனாயிற்று. அவர் எடுத்துச் சென்ற சிறிய கூடையில், பிளாஸ்டிக் சுற்றப் பட்டிருந்தது என்றும், பிளாஸ்டிக் தடை செய்யப் பட்ட நிலையில் அதை பயன்படுத்தியதால், பெங்களூரு நகர மாநகராட்சி சார்பில் மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு நேற்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பெங்களூரு மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அளித்த பரிசுக் கூடையின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் உறை சுற்றப்பட்டிருந்தது தவறு என்றும், அந்த நகரத்தின் மேயர் என்றும் பாராமல் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதால் இது சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வைரலானது.