இளைஞர்களே கண்ணியம் காக்க வேண்டும்: ரஜினி காந்த்

Published:

சென்னை:
இளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக்கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவ, மாணவிகளுக்கும் இளைஞர்களும், தாய்குலமும், அனைத்து தமிழ் மக்களும் நடத்தியது அறவழிப் போராட்டம். இதுவரைக்கும் வரலாறு கண்டறியாதது. அமைதியான, ஒழுக்கமான ஓர் அறவழி ப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது பாராட்டுக்கு உரியது. வெற்றி மாலையணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.

மத்திய, மாநில அரசாங்கம், நீதிபதிகள், வக்கில்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டிற்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும்.

இப்போது சில சமூக விரோத சக்திகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்பிற்கும், முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் போராட்டத்திற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல் துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு இடம் கொடுக்காமல், உடனே அமைதியாக இந்த அறவழி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும், பணிவுடனும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

 

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img