உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வுசெய்த பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டிச., 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும் எனவும், வாக்கு எண்ணிக்கை 2020 ஜன.,2ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப் படவில்லை.
இதனிடையே உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல், தேர்தலை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், நேற்று விசாரணை நடத்திய நீதிமன்றம், தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குவதாக இருந்தது.
இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாகப் படித்து, பின்னரே வேட்பு மனுக்களை ஏற்பது குறித்தும் தேதி குறித்தும் அறிவிக்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.