ரஜினி சொன்னது போல் 1971இல் எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின் போது ராமர், சீதை உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டுவரப்பட்டு அவமானப் படுத்தப் பட்டதாகவும், ராமர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து அவமானப் படுத்தியதை படங்களாக சோ., துக்ளக்கில் வெளியிட்டார் என்றும், அதனை கருணாநிதி தடை செய்தார் என்றும், பிளாக்கில் துக்ளக் விற்றி சோ அன்று பிரபலமானார் என்றும், சோ வின் துக்ளக் பத்திரிகையைத் தவிர வேறு எந்த பத்திரிகையும் இவ்வாறு வெளியிடாமல் இருந்தன என்றும் பேசினார்.
ரஜினியின் பேச்சு, திக., மற்றும் திமுக., சார்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ரஜினி முரசொலி குறித்துப் பேசியதை சர்ச்சை ஆக்க நினைத்து, பின்னர் ஈ.வே.ரா குறித்துப் பேசியதை வைத்து அரசியல் செய்ய நினைத்தார்கள். இதை அடுத்து பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு பொய்யானது என்று கூறி, கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ரஜினி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தாம் கேள்விப்பட்டதையும் அவுட்லுக் பத்திரிகையில் வெளி வந்ததையுமே தான் பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதை அடுத்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஜினிகாந்த் ஒரு நடிகர்; அவர் அரசியல்வாதி இல்லை என்று கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பெரியார் குறித்து பேசும் போது ரஜினிகாந்த் யோசித்து கருத்து கூற வேண்டும் என்றார்.
இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது…. துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக முடியும்? ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் எதற்கு பேச வேண்டும். இது மலிவான அரசியல். தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதில் ரஜினி வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டும். 1971ல் நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார். எத்தனை ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது….என்றார்.
தற்போது திராவிடர் கழகத்தினர் ரஜினி கூறிய இந்த விஷயத்தை எதிர்ப்பதே, இவ்வாறு செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் பின்னர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டன என்றும், இதைக் கூறும் ரஜினி, நீதிமன்றத்தில் அப்பத்திரிகைகள் மன்னிப்பு கேட்டதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறு வருகின்றனர்.
உண்மையில், 1971இல் ஆட்சியில் இருந்த கருணாநிதி, அப்போது ஈ.வே.ரா., நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுக்கு ஆதரவாக போலீஸாரை இருக்க வைத்தார். மாநாட்டின் அவலங்களும் அவமானங்களும் அசிங்கங்களும் தெரிந்திருந்த போதும், அதனைத் தடை செய்யவோ, தடுக்கவோ முன்வரவில்லை. சிரித்தபடி வேடிக்கை பார்த்து ஆதரவளித்த அந்தக் கருணாநிதியின் நிலையினை தெளுவுபடுத்தவே, சோ தமது துக்ளக் இதழில் கார்ட்டூர் வரைந்தார். ஆனால் அந்த கார்டூனை தமது அரசியல் நேர பிரசாரத்துக்காக ஸ்தாபன காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்ட போது, மத்தியில் இருந்த இந்திரா காங்கிரஸின் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த மு.கருணாநிதி, உடனடியாக அந்த துக்ளக் இதழை வெளியிட முடியாத அளவு நெருக்கடி கொடுத்தும், ஒரு பிரதி கூட வெளியில் வராத அளவு பறிமுதல் செய்தும் அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என்னும் அளவில் செய்தியைப் பரப்பினார்.
மேலும், நீதிமன்றத்தில் கருணாநிதியின் போலீஸார் அளித்த வாக்குமூலத்தில், ஊர்வலத்தில் எங்கும் அசம்பாவிதம் நடக்கவில்லை, யாரும் எதிர்க்கவில்லை, அமைதியாக ஊர்வலம் நடந்தது என்று கூற, நீதிமன்றமும் அதனை பரிசீலித்தது. எனவே நீதிமன்றமும் ஊர்வலம் அமைதியாக நடந்தது என்று சான்று கொடுத்தது.
இத்தகைய மிரட்டல் அரசியல் பின்னணியில் தற்போது அந்த உண்மையை ரஜினி கூற, அன்று கருணாநிதி என்ன சொல்லி இதனை நீர்த்துப் போகச் செய்தாரோ அதே போல் கூறி அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இன்றைய தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் அரசியல் செய்கிறார்.