இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள்
மூலமாக மழை பெய்து வருகிறது.
இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும்,
வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையிலும்
நீடிக்கும்.
தென்மேற்கு பருவமழையானது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
தொடங்கி பின்னர் வடஇந்தியா முழுவதும் பரவும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும், அப்போது
சராசரியை காட்டிலும் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு
அரபிக்கடலில் ஏற்பட்ட எதிர் சூறாவளி காரணமாக 2 நாட்களுக்கு முன்பே அந்தமான்
மற்றும் போர்ட்பிளேர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
இதனால் கேரளாவிலும் முன்கூட்டியே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அடுத்த மாதம் வழக்கமான நாட்களிலேயே கேரளாவில் தென்மேற்கு பருவமழை
தொடங்குவதற்கான அறிகுறி தெரிவதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 100 சதவீதம் மழை பொழிவு
இருக்குமென வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தை ஏமாற்றி விட்டது.
தென்மேற்கு பருவ மழை பெய்யும்போது, நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து அணைகளும் நிரம்பும். நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான அணைகளுக்கும்
நீர்வரத்து அதிகரிக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலையில், மழை பெய்யும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும். இந்த ஆண்டு மழை பொழிவு
அதிகம் இருக்கும் என்று கூறப்படுவதால் குற்றாலம் சீசனும் களை கட்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும்பட்சத்தில் கர்நாடகா, கேரளாவில் உள்ள அணைகள்
அனைத்தும் நிரம்பி வழிந்து, தமிழக அணைகளுக்கும் போதிய நீர் கிடைத்து அவைகளும்
நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக முக்கிய பாசன அணையான மேட்டூர் அணைக்குத்
தென்மேற்கு பருவமழையின் போதுதான் நீர்வரத்து அதிகரிக்கும்.