இன்றைய சமூக சூழலில், ரஜினியைப் போன்று மக்கள் எழுச்சி வரவேண்டும் என்று நினைப்பவன் முட்டாள் தான் என்று தனது மனத்தில் உள்ளதை ஆதங்கமாகக் கொட்டித் தீர்த்துள்ளார் இயக்குனர் பேரரசு.
இரு தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். செய்தியாளர்கள் பலரும் நொடிக்கு நொடி அப்டேட் செய்து, பெரும் எதிர்பார்ப்பில் ரஜினியின் பேட்டிக்காகச் சென்றனர். ஆனால் ரஜினியோ, மக்கள் எழுச்சி வரட்டும், நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை, நேர்மையான அரசியல், இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும், ஆட்சி வேறு கட்சி வேறு, ஆட்சியில் கட்சி தலையிடக் கூடாது என்றெல்லாம் தனது கனவுகளைச் சொல்லிவிட்டு கூட்டத்தை நிறைவு செய்து விட்டார்.
ரஜினி வருவார் மாற்று அரசியல் செய்வார் என்றெல்லாம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம். இதனால் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் கருத்துகள் களை கட்டின.
இந்நிலையில், இயக்குனர் பேரரசுவும் தன் பங்குக்கு ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், மக்கள் பார்வையில் ரஜினி ஒரு முட்டாள்தான்… ஏன் தெரியுமா என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பதவிவெறி பிடித்தவர்
மத்தியில்
பதவிக்கு ஆசைப்படாதவன்
பைத்தியக்காரன் !
மதவெறியை தூண்டிவிடுபவர் மத்தியில்
மத ஒற்றுமையை விரும்புபவன்
மடையன்
மக்கள் மடையர்களாகவே இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள் மத்தியில்
மக்களுக்கு எழுச்சி
வரவேண்டும் என்று
நினைப்பவன்
முட்டாள்
வாழ்க தமிழகம் ??