மதுவை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தது!
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மேலும், மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதமாகவும் விதித்தது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் தம்மைக் குறித்த சில தகவல்களை மறைத்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட மனுதாரர் கேட்க முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதை அடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து, அதை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்துக்குள் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்