வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும், கொரோனா அறிகுறி இருந்தால்… இனி வீடுகளில் தனிமைப் படுத்தும் நடைமுறை ரத்து செய்யப் படுவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்! அந்த ஆலோசனைக்குப் பின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர்… என்று தெரிவித்தார் பிரகாஷ்.
தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது.