
தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாநிலத்தில் தூத்துக்குடி, நெல்லையில் சோதனை முறையாக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தைச் செயல்படுத்தும் மத்திய அரசுடன் தமிழக அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில், பயோ-மெட்ரிக் கருவிகளை கொள்முதல் செய்து, அதனை நியாய விலைக் கடைகளில் உள்ள விலைப்பட்டியல் கருவிகளுடன் இணைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்தப் பணிகள் வரும் செப்டம்பருக்குள் நிறைவடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கடந்த மாதம் மத்திய உணவு, பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சா்களுடன் காணொலிக் காட்சி வழியாக ஆலோசனை நடத்திய போது அமைச்சா் காமராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.