நவ.17க்குள் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published:

சென்னை:

வரும் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. இதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பில், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை என்று கூறி தி.முக. தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தி.மு.க.வின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ,தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்துக்கு உட்பட்டு வெளியிடப்பட வில்லை என்று கூறி, தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இந்த விசாரணையின் போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது. தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்பில், ‘குற்றப் பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்றும் வேட்பு மனுவில் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளதால், இது தொடர்பான சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.

இதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பது குறித்து ரகசிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இணங்க, மாநில தேர்தல் ஆணையமும் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது. இதை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ‘நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் பட வேண்டும்; செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவேண்டும்’ என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img