அமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில், இரண்டும்
பற்றி எரிந்தன.
இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப்
போராடிக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
உறவினரைப் பார்த்துவிட்டு ஜவாஹெர் என்ற இளம் பெண் தோழியுடன் காரில் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார்.
ட்ரக் எரிந்து கொண்டிருப்பதையும் உதவி கேட்டு ஒருவர் போராடுவதையும் பார்த்த
ஜவாஹெர் உடனடியாக காரை நிறுத்தினார்.
பின்னர், தன் பர்தாவை கழற்றியதோடு, தோழியின் பர்தாவையும் கழற்றித் தருமாறு
கேட்டுக்கொண்டார்.
இரு பர்தாக்களுடன் தீயில் சிக்கிய டிரைவரை நோக்கி ஓடினார். பின்னர், அவரை
கீழேத் தள்ளி பர்தாவை வைத்து தீயை அணைத்தார்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புப் படையினரும் வந்தனர். தொடர்ந்து, தீயில்
சிக்கியவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஜவாஹெர் காப்பாற்றிய இந்திய டிரைவரின் பெயர் சிங் என விசாரணையில்
தெரியவந்துள்ளது. அவரின் உடலில் 40 முதல் 50 சதவிகித தீக்காயங்கள்
ஏற்பட்டுள்ளன. ஜவாஹெர் மட்டும் சமயோசிதமாக பர்தாவைக் கழற்றித் தீயை
அணைக்கவில்லை என்றால், தீக்காய சதவிகிதம் அதிகரித்திருக்கும் என்று
மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிங் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார்.
சிங் உதவி கேட்டு கத்தியபோது, அருகில் ஏராளமான பணியாளர்கள் இருந்துள்ளனர்.
ஆனால், யாரும் உதவி செய்யவில்லை போலீஸ் அதிகாரிகள் ஜவாஹெர் மற்றும் அவரின்
தோழியின் துணிச்சலைப் பாராட்டினர்.



