
தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும் வணிக வளாகங்களையும் திறந்து வைக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 9 மணி வரை கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருக்கலாம் என்று அனுமதி அளிக்கப் பட்டது.
இந்நிலையில் தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் வியாபாரிகளின் நலன் கருதி அக்.22 இன்று முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிக வளாகங்களையும் திறந்து வைக்க அனுமதி அளித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுடன், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலம், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுப்பது, நோய் தொற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்த மற்ற பகுதிகளில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
கடைகள் மற்றும் பொது இடங்களில் கூட்டம் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும், முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.