ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷிற்கு முழு மனதோடு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
கழக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஆளும் அதிமுக அரசு பாஜகவிடம் தமிழக உரிமைகளை பறிகொடுத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
அதிமுவை பாஜக நேரடியாக ஆளுநர் மூலம் ஆட்சி செய்ய துடிப்பதாகவும் அதே சமயம் அதிமுக அரசு பாஜவின் கைப்பாவையாக செயல்படுவதால்… நடைபெறும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதென்றும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிக்காக பணியாற்றுவது என்றும் முழுமனதாக தீர்மானம் செய்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திராவிட இயக்கத்தை அழிக்கத் துடிக்கும் பாஜகவை எதிர்க்க மதவாதத்தித்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்வது அவசியமாகிறது என்று கூறிய அவர், திராவிட இயக்கத்தின் எதிர்காலம் கருதியும் தமிழர்களின் எதிர்காலம் கருதியும் இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கமளித்தார்.
திமுக-மதிமுக இடையே நல்லிணக்கமான சூழல் ஏற்பட்டு வருவதன் தொடக்கப்புள்ளியாக இதை எடுத்துக் கொள்ளலாம் என கூறிய அவர், திமுக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து எழுந்து சென்று விட்டார்.
திமுக தரப்பில் ஆதரவு கேட்கப் படாமலேயே இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளித்திருப்பது, வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக இருக்கும் என கருதப்படுகிறது.