
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை இன்று 5.1.2021 செவ்வாய்கிழமை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது. காலை 7 மணி அளவில் சின்னநாயகர் பராசக்தி அம்மன் தீபாராதனைக்கு பின் கொடி மரம் முன் எழுந்தருள தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர். பத்து மாதங்களுக்கு பிறகு விநாயகர் சுவாமி அம்மன் திட்டி வாசல் வழியே மாட வீதி பவனி வந்தனர்.
பத்து நாட்கள் காலை மாலை சந்திரசேகரர் விநாயகர் வீதி உலா. பத்து நாட்கள் உத்ஸவத்திற்கு பின் 15.1.2021 வெள்ளிக்கிழமை திருவூடல் உத்ஸவம். உத்தராயண புண்ணிய கால உத்ஸவ கொடியேற்றம் இன்று 05.01.2021 திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்றது.
திருவண்ணாமலை தலத்தில் ஆண்டுதோறும் 4 உத்ஸவங்கள் நடை பெறுகின்றன . அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது உத்தராயண புண்ணியகால பூஜை! இந்த விழா 10 நாட்கள் நடைபெறும் . மார்கழி மாதத்தின் கடைசி 9 நாட்களும் தை மாதத்தின் முதல் நாளும் இந்த 10 நாள் பூஜை இங்கு நடைபெறும்

முதல் நாள் அண்ணாமலையார் , உண்ணாமலையம்மன் உத்ஸவர் , மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அதன் பின் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் , விநாயகர் , பராசக்தி அம்மன் , சண்டிகேசுவரர் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க வருகை தந்து தங்ககொடி மரத்தின் அருகே எழுந்தருள்வார்கள் .
அதற்கு பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உத்தராயண புண்ணியகால பிரமோத்ஸவ கொடியேற்றம் விழா நடைபெறும் . அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்புவார்கள் . இந்த காட்சி கண்கொள்ளா காட்சி என்றே சொல்லலாம் .

உத்திர என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள் . அயணம் என்றால் வழி என்று அர்த்தமாகும் . சூரிய பகவான் தென்திசையில் இருந்து வடதிசை நோக்கி பயணம் செல்லும் காலமே உத்தராயண புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது .தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய 6 மாதங்களும் உத்திராயண காலமாகும் .
- செய்தி: எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை