திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்த 4 நாட்களில் புதுமாப்பிள்ளை மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்திபா (19). இவர் கனகம்மாசத்திரத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே கம்பெனியில் வேலை செய்து வந்த சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த ஜெபஸ்டின் (21) என்பவருடன் கீர்த்திபாவிற்கு அறிமுகம் கிடைத்தது.
இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்து அது காதலாக மலர்ந்துள்ளது. கடந்த 8 மாதங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் கீர்த்திபா வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்த்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கீர்த்திபா தன் காதலன் ஜெபஸ்டினிடம் கூறியுள்ளார். இருவரும் பேசி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கடந்த 13ம் தேதி திருப்பாச்சூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து, புட்லூரில் உள்ள ஜெபஸ்டினின் பாட்டி வீட்டில் கணவன், மனைவியாக இருவரும் வாழ்ந்து வந்தனர். 4 நாட்கள் சென்ற இவர்களது திருமண வாழ்வில் திடீர் திருப்பமாக ஜெபஸ்டின் மாயமாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்திபா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளை காணாமல் போன சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.