என்னை போன்று நீங்களும் கொரோனாவால் சித்ரவதையை அனுபவித்து விடாதீர்கள்; அரசு அறிவுரைகளை தவறாது பின்பற்றுங்கள்’ என்ற டி.எஸ்.பி.,யின், ‘வீடியோ’ கொரோனா பாதிப்பின் விபரீதத்தை உணர்த்துகிறது.
கரூரில் பணியாற்றும் டி.எஸ்.பி., அய்யாசாமி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இவர் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியுள்ளதாவது: கொரோனா என்பது மனித குலத்தை அழிக்க வந்த பேராபத்து என்று தான் சொல்ல வேண்டும். என்னை போன்ற வயதுடையவர்கள் பாதிப்புக்கு ஆளானவர்கள், முதியோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனக்கு கொரோனா அறிகுறி வந்தவுடன் அரசு மருத்துவமனை சென்றேன்.சி.டி., ஸ்கேன் எடுத்து முடிவை சொல்லவே இரண்டு நாட்கள் ஆனது.
அதற்குள் முழு அளவில் பாதிக்கப்பட்டுவிட்டேன். கரூர் எஸ்.பி., எனக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
அங்கு என்னை பரிசோதித்து உப்பு சத்து அதிகமாக இருப்பதாகவும், அதை குறைத்தால் தான் கொரோனா சிகிச்சை பலனளிக்கும் என்றனர். அதுவரையும் காய்ச்சல் எனக்கு குறையவே இல்லை.
ஒருவழியாக இப்போது செத்து பிழைத்துள்ளேன். சித்ரவதை என்றால் இதுபோன்ற சித்ரவதையை என் வாழ்நாளில் அனுபவித்ததில்லை.
எனது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டது. அவர் எப்படி இருக்கிறார் என்று கூட கேட்க முடியவில்லை. உறவினர்கள், நண்பர்கள் அருகே வந்து உதவ முடியாத சூழல். சாப்பிட முடியாது. நடக்க முடியாது.
எதுவும் செய்ய முடியாது. கழிவறைக்கு கூட எழுந்து செல்ல முடியாது என்றால் நிலையை புரிந்து கொள்ளுங்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னை போன்று நீங்களும் இந்த சித்ரவதையை அனுபவிக்க கூடாது. வரும்முன் காப்பதே சிறந்தது. அரசு அறிவுறுத்தல்படி முக கவசம், கிருமி நாசினி மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடியுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த விழிப்புணர்வு வீடியோ வைரலாகி, கொரோனாவின் விபரீதத்தை தீவிரமாக உணர்த்தி வருகிறது.