தமிழக அரசு ஊழியர்கள், தங்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும்நடைமுறையை, மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு விடுப்பு விதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியம் வழங்கப்படும்.
இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது.
மாநில அரசின் கீழ் வரும் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைகழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கும் பொருந்தும் என்று ஏற்கனவே உத்தரவு பிறபிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஈட்டிய விடுப்பினை சரண் செய்து அளிக்கும் திட்டம் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த உத்தரவானது அனைத்து கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையங்கள், வாரியங்கள், சங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2020-ம்ஆண்டு ஏப்ரல் முதல் ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் இந்த கால அளவு முடிந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை பெற்றுக் கொள்ள அரசு ஊழியர்கள் தயாராக இருந்தனர்.
ஆனால், தற்போது அடுத்த உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை பணமாகப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுஅறிவித்து, அதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈட்டிய விடுப்பினை சரண் செய்து அளிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட கால அளவானது முடிவடைந்த நிலையில் , தடை உத்தரவானது மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி.கே.ராஜந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என அரசு ஊழியர்கள் நம்பியிருந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுபான்மையினர் தாங்கள் போட்ட பிச்சையால் இந்த அரசு என்று பேசிய பேச்சு.. இப்பொழுது அரசு ஊழியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமும் தான் ஓட்டு(பிச்சை) போட்டோமே என வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
கல்வித்துறை பொருத்த அளவில் கேள்வித்தாள் லீக் ஆனது, கல்விப் பாடத்திட்டத்தில் தவறான முன்மாதிரிகள் இடம் பெறுவது… கலந்தாய்வு குளறுபடி, சர்ப்ளஸ் இடமாற்றத்தால் வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கும் ஆசிரியர்கள், மேலும் மாற்றப்பட்ட அவர்களுக்கு இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது… மாணாக்கர்கள் தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு புரிதலுடன் போய்க் கொண்டிருந்த பாடத்தில் தொய்வு.. இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளை அடுக்கடுக்காய் சந்தித்து வரும் ஆசிரியர்களிடையே மிகவும் மன உளைச்சலும், அரசின் மீதான அதிருப்தியும் அதிகரித்துள்ளது.