சென்னை: தேமுதிக தலைவரான விஜயகாந்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் சிலர் பரப்புவதாக தேமுதிகவினர் மற்றும் அக்கட்சி வழக்குரைஞர் அணியினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆணையரைச் சந்தித்து புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளனர். அதில், “தேமுதிக தலைவர் விஜயகாந்தினை பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். அவர் பற்றிய அவதூறான கருத்துக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு அவருடைய மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். முக்கியமாக, மேட்டுப்பாளையம் அதிமுக தொழிற்சங்க நிர்வாகி எம்.கே. சந்தானம், அதிமுக நிர்வாகி குடந்தை முத்து ஆகியோர் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றனர். இதில் மேட்டுப்பாளையம் நிர்வாகி சந்தானம் மீது, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திலும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார்கள் அளிக்கப்பட்டு அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள தரக்குறைவான கேலிச்சித்திரங்கள், மற்றும் விமர்சனங்களில் சிலவற்றை தங்களின் பார்வைக்காகவும், தகவலுக்காகவும், இத்துடன் இணைத்துள்ளோம். இது போன்ற விஷமத்தனமான கேலிச்சித்திரங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், மற்றும் அபிமானிகளின் மனங்களை பெரிதும் புண்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரக்குறைவாகவும், வக்கிரமனதுடனும், அரசியல் காழ்புணர்ச்சியுடனும், தேமுதிக கட்சித்தலைவரும், தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சிப்பது எந்தவகையிலும் ஏற்க முடியாத செயலாகும். மேலும் தற்பொழுது முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் ஆகியவற்றில் உள்ள தரைக் குறைவான படங்கள், விமர்சனங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் தலைவர் விஜயகாந்தை உண்மைக்கு புறம்பாகவும், சமுகத்தில் அவரது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் கேலிச்சித்திரங்கள், படங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் ஆகியவற்றில் வெளியிடுபவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் மூலம் குற்ற வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: நடவடிக்கை கோரி ஆணையரிடம் தேமுதிக புகார்
Popular Categories



