அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அசாமில் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.
இந்நிலையில் இந்த வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் 6.62 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
26 மாவட்டங்களில் 1,089 கிராமங்கள் வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியதாக மாநில அரசு கூறியுள்ளது.வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலத்தில் இதுவரை குறைந்தது 9 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.







