ரூ.1 கோடி பரிசு என எஸ்.எம்.எஸ் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி!

Published:

கரூர்: கரூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளதாக செல்பேசியில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ரூ. 9 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வெங்கமேடு சின்னகுளத்துப் பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (48). இவரது செல்பேசிக்கு கடந்த அக்.14-ஆம் தேதி ஒரு எஸ்,எம்.எஸ் வந்தது. அதனை தில்லியைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர் அனுப்பியிருந்தார். அந்த எஸ்.எம்.எஸ்ஸில் கண்ணையனுடைய செல்பேசி எண் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாவும், இதில் அவருக்கு ரூ. 1 கோடி வரை பரிசு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறுவதற்கு முதலில் ரூ.9.26 லட்சம் செலுத்திய பிறகு கூடுதலாக ரூ.5.34 லட்சம் வங்கியில் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி அதற்கான வங்கிக் கணக்கு எண்ணும் அனுப்பப்பட்டிருந்தது. இதை நம்பிய கண்ணையன் கடந்தாண்டு ஆக.17-ஆம் தேதி ரூ.9.26 லட்சத்தை வங்கியில் செலுத்தினார். எனினும், சில மாதங்கள் கழிந்த பிறகும் பரிசுப் பணம் அவருக்கு வரவில்லை. இதையடுத்து, கண்ணையன் பிராங்களினிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு, பணம் வராதது குறித்து கேட்டுள்ளார். அதற்கு பிராங்க்ளின், மீதமுள்ள ரூ. 5.34 லட்சத்தை அனுப்பினால்தான் முழுப் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணையன், இது குறித்து கரூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே இதுபோல், பலரிடம் பணம் பெற்று ஒரு கும்பல் ஏமாற்றி வருவது குறித்து போலீஸார் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும், பணம் குறித்த பேராசையில், போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி, இதுபோல் பணம் செலுத்து ஏமாந்தவர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே வருகிறது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Related articles

Recent articles

spot_img