
புரட்டாசி மாத பிறப்பையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன. கேரளாவில் இன்று புரட்டாசி மாத சிறப்பாகும்.தமிழகத்தில் நாளை புரட்டாசி மாதம் பிறக்கும் நிலையில் பெரும்பாலான பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி முதல் சனி வழிபாட்டை பக்தர்கள் நடத்தி வருகின்றனர்.
சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு புரட்டாசி மாத தொடக்கத்தினையொட்டி அதிகாலையிலேயே சுப்ரபாத சேவையுடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது.
அதனையடுத்து சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்புப் பூஜைகளையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. இப்பூஜைகளில் 900க்கும் மேற்பட்ட பக்தர்கள் புரட்டாசி விரதமிருந்து மலை ஏறிச்சென்று சுவாமிகளை வழிப்பட்டு சென்றனர்.
மலை மீது உள்ள ஆஞ்சநேயர் சுவாமி
சங்ககிரி அருள்மிகு சென்னகேவப்பெருமாள் பக்தர்கள் குழுவின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத தொடக்கத்தின் முதல் சனிக்கிழமை மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த வருடம் புரட்டாசி மாதம் செப்டம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்.17ம் தேதி முதல் பக்தர்கள் விரதமிருந்து சென்னகேசவப் பெருமாளை வழிபடுவதற்காக செப்டம்பர் 15ம் தேதி வியாழக்கிழமை காலையிலிருந்து மலையடிவாரத்திலிருந்து சுவாமிக்கு தேவையான அபிஷேக, ஆராதனைப் பொருள்கள் மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்திற்குத் தேவையான பொருள்கள், எரிவாயு உருளைகளை தலைமை சுமையாக எடுத்துச் சென்றனர்.
செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் மலைக்குச் சென்றனர். செப்டம்பர் 17ம் தேதி சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். மலைக்குச் சென்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் 30வது ஆண்டாக காலை, மதியம் அன்னதானமும், லட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டன.





