
உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
கிண்டில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். ‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற உடன் முதல்-அமைச்சர் முக. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக தமிழக முதல்வரும், தனது தந்தையுமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தாய் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, தலைமுறை தலைமுறையாக, வாரிசு வாரிசாக இந்த கட்சியில் இருப்பவர்கள் நாங்கள். எவர் எதைப்பற்றி பேசினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. தலைமுறை தலைமுறையாக வாழ்வோம். நீங்கள் அதற்கு எந்த பெயர் சூட்டினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. கலைத்துறையில் எப்படி வாரிசுகள் வருகிறார்களோ அதேபோல் அரசியலில் வாரிசுகள் வருவது தவறில்லை. அமைச்சராக வரவிருக்கின்ற உதயநிதி அரசியலில் கால்வைத்த நாள் முதல் வெற்றிகளையே தேடிக்கொடுத்து வருபவர். தமிழ்நாடு முழுவதும் ஒரே செங்கலை வைத்து கோட்டையை தகர்த்து காட்டிய பெருமை உதயநிதி ஸ்டாலினுக்கு உண்டு’ என்றார்





