
மும்பை: ஐஎன்எஸ் மோர்முகாவோ போர்க்கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தக் கப்பலை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்!
இந்தக் கப்பலில் பயன்படுத்தப்பட்டு உள்ள 75 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இந்த கப்பல் 163 மீ., உயரமும், 17 மீ., அகலமும் உடையது.7,400 டன் எடையை தாங்கி செல்லும் திறன் உடையது. இந்தக் கப்பலின் அதிகபட்ச வேகம் 30 கடல் நாட்டிகல் மைல் ஆகும்.
இந்திய கடற்படையின் உள் நிறுவனமான ‘வார்ஷிப் டிசைன் பீரோ’வால் வடிவமைக்கப்பட்டு, ‘மாஷாகான் டாக்’ என்னும் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டது. ஐஎன்எஸ் மோர்முகாவோ போர்க்கப்பல், இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.
இந்தக் கப்பலில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. தரையில் இருந்து வானில் இருக்கும் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள், தரையில் இருந்து சென்று தரையில் இருக்கும் இலக்குகளை அழிக்கும் ‘பிரமோஸ் ‘ ரக ஏவுகணைகள், டியூப் லாஞ்சசர்கள், உள்ளிட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கருவிகளும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது.
அணுஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் போன்ற ஆபத்தான ஆயுதங்களை போன்ற நிலைமைகளை சமாளிக்கும் வகையில் உள்ள இந்த கப்பலில், அதி நவீன ரேடார்களும் பொருத்தப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட போர்க்கப்பல்களில் சக்தி வாய்ந்தவற்றில் ஒன்றாக ஐஎன்எஸ் மோர்முகாவோ போர்க்கப்பல் உள்ளது.
நாட்டின் கடலோர பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதை இது உறுதி செய்யும். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஏவுகணைகளை தாங்கும் வசதியும் உள்ளது. நாட்டின் தற்போதுள்ள மற்றும் எதிர்கால பிரச்னைகள், உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளின் சவால்களை இந்தப் போர்க்கப்பல் சமாளிக்கும்.