இரண்டாவது முறையும் கடிதம் வாங்க மறுத்த அதிமுக-தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் அதிகாரி புகார்..

Published:

images 70 - 2026

இரண்டு முறை கடிதம் அனுப்பியும் அதனை வாங்க அதிமுக மறுத்துவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரியப்படுத்தியுள்ளார். இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய  இருக்கிறது. இது தொடர்பாக  செயல் விளக்க கூட்டம் ஜன.16-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ,  அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அதிமுகவிற்கு அனுப்பிய  கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தாலும், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தக் கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்துவிட்டனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என்று கூறிய அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பினர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்நிலையில் இந்தக் கடிதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்திருந்தார். அதில், இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படி தான் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதே கடிதத்தை , தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பினார்.

ஆனால் அந்த கடிதத்தையும் அதிமுக வாங்க மறுத்ததோடு, திருப்பி அனுப்பியுள்ளது. இந்நிலையில், இரண்டு முறை கடிதம் அனுப்பியும் அதனை வாங்க அதிமுக மறுத்துவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் அதிகாரி தெரியப்படுத்தியுள்ளார். கடிதத்தை அதிமுக வாங்க மறுத்தது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்தியுள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img