
ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் புகார் மேல் புகார் பறக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய துணை தலைமை தேர்தல் அதிகாரி இன்று தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே, இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. வாக்காளர்களை அடைத்துவைப்பதாகவும், வாக்களர்களுக்கு குக்கர், பிரியாணி, இறைச்சி, மளிகைபொருட்கள் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மேலும், வாக்காளர்களை அரசியல் கட்சிகள் சுற்றுலா அழைத்து செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் வந்தவண்ணம் உள்ளதால் இடைத்தேர்தல் ரத்தாகும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பணவிநியோகம், பரிசுப்பொருள் விநியோகம் தொடர்பாக எழுந்த புகார்கள் மேலும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது.
இந்திய தலைமை துணை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .




