
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது. ஒருசிலரை தவிர வேறு யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம் என எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மதுரையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் கூறியதாவது:- உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றதீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது.
சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற அற்புதமான திர்ப்பு கிடைத்துள்ளது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார்; இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை.
இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆட்சி நீடிக்குமா? என்ற கணிப்புகளை பொய்யாக்கி 4 ஆண்டு 2 மாதங்கள் பொற்கால ஆட்சி கொடுத்தேன். உச்சநீதிமன்ற தீர்பால் எழுச்சியுடன் அதிமுக தனது கட்சி பணிகளை ஆற்றும். உச்சநீதிமன்றம் கூறிவிட்டதால் அதிமுக தலைமை குறித்து இனி கேள்வியே இல்லை.
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளராக இருப்பேன். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற உச்சநீதிமன்றம் தீர்ப்பு உதவும். ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம். அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும்.ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது என கூறியுள்ளார்.உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ உட்படபலர் இருந்தனர்




