புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப் படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சிறைபிடித்தனர். 5 படகுகளில் இருந்த 43 மீனவர்களைப் பிடித்துச் சென்றனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி அவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டதாகத் தெரிகிறது. அனைவரும் காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் யார், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தகவல் வந்தால்தான் மற்ற விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் யார் என்று தெரியாததால் காரைக்கால் மீனவர் கிராமங்களில் குழப்பம் நிலவுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் படகுதான் சிறைப்பிடிக்கப்பட்டிருக்குமோ என்று கவலையில் உள்ளனர்.

