சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ் இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் கோடியக்கரை அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 66 பேரை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. கோடியக்கரையில் தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை மீனவர்களும் அங்கு வந்து மீன்பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து சென்ற மீனவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், விரைந்து வந்த சிங்களப்படையினர் தமிழக மீனவர்கள் 43 பேரை தாக்கி கைது செய்துள்ளனர். அதேபகுதியின் இன்னொரு இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 23 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழ் மீனவர்களை சிங்களப் படையினர் தாக்கி கைது செய்திருப்பது இந்திய இறையாண்மை மீதான தாக்குதலாகும். இலங்கையில் இராஜபக்சே அரசு வீழ்த்தப்பட்ட பிறகு தமிழக மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பரப்புரைகள் செய்யப்பட்டன. ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வது வருத்தமளிக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய அறிவுறுத்துவதுடன், இனியும் இத்தகைய போக்கு தொடர்ந்தால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அடுத்த மாதம் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனாவை சந்திக்கும் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

