
ஒடிசா பாலாசோர் அருகே நடைபெற்ற ரயில் விபத்து மனத்தை உலுக்குவதாகவும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ள தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக., சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது…
ஒதிஷாவின் பாலசோர் பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நடந்த பயங்கர ரயில் விபத்து, மிகுந்த வேதனை தருவதாகவும், இதயத்தை உலுக்குவதாகவும் உள்ளது. தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு, இந்த பேரிழப்பைத் தாங்கும் சக்தியை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.
இந்த பயங்கர ரயில் விபத்தைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடத்தவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் தமிழக பாஜக., ஒத்தி வைத்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் பத்திரமாகத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை, ரயில்வே துறை மற்றும் ஒதிஷா மாநில பாஜக தொண்டர்களுடன் இணைந்து, அகில இந்திய ரெயில் பயணிகள் வசதிகள் அமைப்புக் குழு உறுப்பினரும், மத்திய சென்னை கிழக்கு தமிழக பாஜக., பார்வையாளருமான திரு ரவிச்சந்திரன் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார். – என்று தெரிவித்துள்ளார்.