கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில மாநாடு கோவையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பிற்பகலில் மாநில செயலாளருக்கான தேர்தல் நடைபெற்றது. இப்பதவிக்கு மாநில துணை செயலாளராக உள்ள மகேந்திரனும், விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ள முத்தரசனும் போட்டியிட்டனர். இதனால் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முத்தரசனுக்கு ஆதரவாக 63 ஓட்டுக்களும், மகேந்திரனுக்கு ஆதரவாக 61 ஓட்டுக்களும் விழுந்தன. எனவே 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முத்தரசன் புதிய மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டார். மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தரசன் (வயது 65) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். இவர் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளராக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்

