பாஜக.,வில் கட்சியை இணைத்தார் சமக., தலைவர் சரத் குமார்!

Published:

sarath kumar in bjp - 2026

எதிர்பாராத நிகழ்வாக, தாம் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பாஜக.,வுடன் இணைத்தார் நடிகரும் அர்சியல்வாதியுமான சரத் குமார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாஜக.,வுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது குறித்து முடிவு செய்து, அதுகுறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார் சரத் குமார். அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் கட்சியை பாஜக.,வுடன் இணைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான நிர்வாகிகளின் முடிவை ஏற்று கட்சியை பாஜக.,வுடன் இணைப்பதாக அவர்கள் மத்தியில் சரத்குமார் அறிவித்தார்.

இதுகுறித்து, தமிழக பாஜக., மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர், சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தார்கள். அங்கே, சமக., பாஜக.,வுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டு, இணைப்பு விழா நடந்தது.

இதை அடுத்து, சரத் குமாருக்கு பாஜக., நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பாஜக.,வுடன் தன் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சால்வை அணிவித்தனர். பாஜக.,வுடன் முன்னதாக கூட்டணி மட்டுமே அமைத்து இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகக் கருத்து தெரிவித்து வந்த சரத் குமார், திடீரென சமத்துவ மக்கள் கட்சியையே பாஜக.,வுடன் இணைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

காமராஜரைப் போல் மோடி ஆட்சி

இது குறித்து சரத்குமார் கூறியபோது, “பெருந்தலைவர் காமராஜரைப் போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் நலன் கருதியும் சமத்துவ மக்கள் கட்சியை பாஜக.,வுடன் இன்று இணைத்துள்ளேன். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. பாஜக.,வில் சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்துகளையும் பெற்றுள்ளேன். உங்களது விருப்பம் மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியை இணைத்துள்ளோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது” என்றார்.

சரத்குமார் கடந்த 2007ல், சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். திமுக., அதிமுக., என இரண்டு கழகங்களுடனும் கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்தார். ஒருமுறை தென்காசி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கடந்த 17 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த அவர் தற்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் தனது 17 ஆண்டுக் காலம் நடத்தி வந்த கட்சியை இணைத்திருப்பது இன்றைய ஆச்சரியமான சம்பவமாகப் பேசப்பட்டது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை இது குறித்து கருத்து தெரிவித்த போது,

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமைத்துவதால் ஈர்க்கப்பட்ட சிறந்த தேசியவாதியான திரு சரத்குமார் அவர்கள், இன்று, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் & பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு அரவிந்த் மேனன் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது கலைத்திறன் மூலம் தேசிய உணர்வுக்கு குரல் கொடுத்த திரு சரத்குமார் அவர்கள், தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், திரு சரத்குமார் அவர்கள் எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். தமிழக பாஜக சார்பில், பாஜக குடும்பத்திற்கு திரு சரத்குமார் அவர்களை மனதார வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img