ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தொடக்க நாளில் மனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

Published:

srirangam_temple ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்றே, அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்புமனு தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் காதர்மொய்தீனிடம் தனது வேட்பு மனுவை அவர் அளித்தார். வரும் 27-ஆம் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்கு மறுநாள் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருச்சி- திண்டுக்கல் சாலையிலுள்ள ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் (தேர்தல் நடத்தும் அலுவலரிடம்) அல்லது திருவானைக்கா டிரங்க் சாலையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலும் (உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்) வேட்பு மனுக்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளருடன் எத்தனை வாகனங்கள் வந்தாலும் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிக்கு 100 மீட்டர் முன்னதாக அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு 3 வாகனங்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அலுவலகத்திற்குள் 1 வாகனம் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அதேபோல் வேட்புமனு கொடுக்கும் அறையில் வேட்பாளருடன் 4 பேர் என ஒரு கட்சிக்கு 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் துவங்குவதையொட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் 70 போலீசாரும், ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் 150 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img