நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இன்று வழக்கறிஞர் ராஜசேகர் விலகியுள்ள நிலையில், அரசியலில் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்ணாசதுக்கத்தில் உள்ள இளங்கோவடிகள் படத்திற்கு மரியாதை செலுத்தியபின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக நாளிதழில் வெளியான கூட்டாணி தொடர்பான கட்டுரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றார். மேலும், யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சிதான் உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுகவில் பல தலைமை இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என்றும், துப்பாக்கியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை;மக்களின் இதயம் மீதுதான் நம்பிக்கை உள்ளது என்றும், துப்பாக்கி,சோடா பாட்டில் போன்றவை எல்லாம் திமுகவுக்கு தான் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு தருணங்களில், அமைச்சர் ஜெயகுமார், கமல்ஹாசனை, “உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடமே பணம் கேட்ட தலைவர் கமல்ஹாசன்தான்” என்றும், “நடிகர் கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாவிட்டால் என்னிடம் போன் போட்டு சந்தேகம் கேட்கலாம்” என்றும், “மாடி மேல் இருந்து கொண்டு பார்க்கும் கமல் போன்றவர்களுக்கு மக்கள் பிரச்னை புரியாது” என்றும் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


