விஜயகாந்த் கூட்டத்தில் தீக்குளித்த தொண்டர் மரணம்

மதுரை:

விஜயகாந்த் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தீக்குளித்த தேமுதிக தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார்.
 
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது பொதுக்கூட்டம் முடியும் தருவாயில், திண்டுக்கல் 8வது வார்டு கிளைச் செயலாளர் கஜேந்திரபிரபு அந்தக் கூட்டத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
மதுரை மருத்துவமனையில் விஜயகாந்த் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்பொது கஜேந்திர பிரபு, மாவட்ட செயலாளர் ரவிக்குமார் பற்றி பல புகார்களை தெரிவித்தார். தன்னிச்சையாக செயல்படுகிறார். தன்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்பதற்காகவே தான் தீக்குளித்ததாகவும், அவர் அந்தப் பதவியில் இருந்தால் கட்சியில் முன்னேற்றம் ஏற்படாது என்றும் விஜயகாந்திடம் தெரிவித்துள்ளார்.
 
இது பற்றி விசாரணை செய்த விஜயகாந்த், அந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, புதன் கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ரவிக்குமாரை பதவியில் இருந்து நீக்கினார்.
 
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரபிரபு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.