சேலம்:
குடும்பத் தகராறில் மூதாட்டி ஒருவரின் முதுகில் குத்தப்பட்ட கத்தி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
சேலம் சேலம் மாவட்டம் குகை நல்லாயி தெருவைச் சேர்ந்த 60 வயது லோகாம்பாளுக்கும் கணவர் சித்த ஆசாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு ஒரு மணி அளவில் லோகாம்பாள் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் முதுகில் சித்த ஆசாரி கத்தியால் குத்தியுள்ளார். இதில் நுரையீரல் வரை கத்தி பாய்ந்தது.
கத்தியால் குத்தப்பட்ட நிலையில் லோகாம்பமாள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது, அவரது வலது நுரையீரலில் ஆழமாகக் கத்தி பாய்ந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ராஜராஜன் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஜீவா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் லோகாம்பாளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் கத்தி அகற்றப்பட்டது.
மேலும், இந்த அறுவை சிகிச்சையின் போது லோகாம்பாளின் நுரையீரலில் ரத்தக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, அதுவும் அறுவை சிகிச்சையின் போது அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை டீன் (பொறுப்பு) ரவிசந்திரன் பாராட்டினார்.
இதனிடையே கத்திக் குத்து தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.