சென்னை:
காவடி, தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் கட்டணங்களை ரத்து செய்யப்படும் என்ற அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், தமிழக முதல்வர் தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அறநிலையத் துறை அமைச்சர் இன்று சட்டமன்றத்தில் கொடுத்துள்ள அறநிலையத் துறை சம்பந்தமான அறிவிக்கையில் காவடி, தீச்சடிப் போன்ற நேர்த்திக்கடன் செலுத்துவோரிடம் கோயிலில் பெறப்பட்டு வந்த கட்டணத்தை தமிழக முதல்வரின் ஆணைப்படி ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது.
சாமானியன் தன் கஷ்டத்தை இறைவனிடம் முறையிட்டு மன ஆறுதல் அடையவும், தனது வேண்டுதல் நிறைவேற்றிய இறைவனுக்கு தான் வேண்டிக்கொண்ட நேர்த்திக் கடனை செலுத்த வரும்போது, அதுவும் விசேஷ நாட்களில் கட்டணம் வசூலிப்பது எத்தனை பெரிய தண்டனை! பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையில் இப்படிப்பட்ட இடைவெளியை கட்டணம் என்ற வகையில் ஏற்படுத்துவதை இந்து முன்னணி தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக, மக்களின் ஆதரவோடு எதிர்த்துப் போராடி வருகிறது.
இதுபோல ஆலய தரிசனக் கட்டணத்தையும் தமிழக முதல்வர் அவர்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற நிலையில் தரிசனம் செய்ய தகுந்த ஏற்பாட்டை அறநிலையத்துறை செய்ய வேண்டும். இறைவனைக் காட்சிப் பொருளாக்கி கட்டணக் கொள்ளை அடிப்பது கொடுமையானது. கோயில்களில் ஏராளமாக சொத்துக்கள் இருக்கின்றன, அதுமட்டுமல்ல வருடா வருடம் காணிக்கையும், வருமானமும் அதிக அளவில் வரும் நிலையில் இறைவனைக் காண கட்டணம் கேட்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
சிறுபான்மையினர் நல அமைச்சரின் அறிவிப்பில் வக்ஃப் வாரிய சொத்துக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அரசின் உதவிகள் முதலியன இடம் பெறுகிறது. ஆனால், அறிநிலையத்துறை அமைச்சரின் அறிவிக்கையில் கோயில்களைப் பாதுகாக்க, கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, வாடகை பாக்கி வசூலிக்க, ஆலய மற்றும் பக்தர்களின் வசதிக்கான அரசின் நிதி உதவி குறித்த எந்த குறிப்பும் இல்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.


